மாதவிடாய் சீராக இல்லை, தள்ளிப்போதல், அதிக உதிரப்போக்கு எனில் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் கவனமுடன் இருப்பது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பெண்களின் மாதவிடாய் சீரற்ற போக்கு அவர்களுக்கான உடல் நல பாதிப்புகளை தெரியப்படுத்தும் அறிகுறியாகும். எனவேதான் மாதவிடாய் சீராக இல்லை, தள்ளிப்போதல், அதிக உதிரப்போக்கு எனில் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் கவனமுடன் இருப்பது அவசியம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்படி மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருகிறது எனில் அது சாதாரண விஷயமாகக் கருதிவிட முடியாது. அதற்கும் சில காரணங்கள், உடல் மாற்றங்கள் உள்ளன. அவை என்னென்ன பார்க்கலாம்.
நீங்கள் திடீரென உடல் எடை அதிகரித்தாலோ அல்லது உடல் எடையைக் குறைத்தாலோ இந்த பிரச்னை உண்டாகும். ஏனெனில் இந்த திடீர் உடல் மாற்றம் ஹார்மோன்களை நிலைகுலையச் செய்யும். அதனால் இந்த பாதிப்பு உண்டாகும்.
Polycystic ovary syndrome என்று சொல்லக் கூடிய இந்தப் பிரச்னை பெண்கள் அதிகமாக சந்திக்கக் கூடியதாக உள்ளது. ஹார்மோன் சமநிலையின்மைக் காரணமாக கருப்பையில் சிறிய நீர்க்கட்டி உருவாகும். அதன் காரணமாகவும் இரண்டு முறை மாதவிடாய் வருதல், அதிக உதிரப்போக்கு ஏற்படும்.
கருத்தடை மாத்திரைகள் சாப்பிட்டாலும் உடல் திடீரென மாதவிடாய் உதிரப்போக்கை உண்டாக்கும்.
இவை தவிர பாலியல் தொற்று, பூப்படைதல், கருப்பையில் பிரச்னை போன்ற காரணங்களாலும் வரலாம். இதை சரி செய்ய பெண்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை சீராக்கினாலே போதுமானது. அதற்கு பெண்கள் கார்போஹைட்ரேட் உணவு மற்றும் ஜங் ஃபுட்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் கீரை வகைகள் என சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதேபோல் ஆயுர்வேத பானங்கள் அருந்தலாம். கற்றாழை ஜூஸ், இஞ்சி ஜூஸ் என குடிக்கலாம். அதேபோல் வெல்லம் மற்றும் நல்லெண்ணெய், எள் சாப்பிடுவதும் கருப்பை ஆரோக்கியத்திற்கு நல்லது. மன அழுத்தமும் மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை உண்டாக்கும். எனவே அதை தவிர்க்க யோகா, தியானம் , இனிமையான பாடல்கள் கேட்பது என மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பெண்கள் அதிக அளவில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் பழக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த பழக்கம் கருப்பையை நேரடியாக பாதிக்கும்.