ஒவ்வொரு பெற்றோரும் மற்ற குழந்தைகளை விட தங்கள் குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள். படிப்பு மட்டுமின்றி நீச்சல், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு உள்ளிட்ட பிற தனித்திறன்களையும் தங்கள் குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் ஒரு சில பயிற்சிகளை குறிப்பிட்ட வயதில் மேற்கொள்வதுதான் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்த வயதில் எந்த பயிற்சியை தொடங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
கால்பந்து: 3 முதல் 5 வயதுக்குள் கால்பந்து விளையாடுவதற்கு பயிற்சி பெற தொடங்கலாம். இந்த வயதுகளில்தான் குழந்தைகள் ஓட வும், குதிக்கவும், கால்பந்து அல்லது வேறு எந்த பந்தையும் வீசி எறிந்து விளையாடுவதற்கான சமநிலையை வளர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த வயதுகளில்தான் அவர்களின் பார்வை வளர்ச்சி அடையும் நிலையில் இருக்கும்.
கராத்தே: பெரும்பாலான குழந்தைகள் தற்காப்பு கலை பயிற்சிகளை 3 வயதில் பழக தொடங்குகிறார்கள். இருப்பினும் குழந்தைகளின் உடல் திறன் மற்றும் பள்ளிகளை பொறுத்து வயது மாறுபடுகிறது. சில பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் தற்காப்பு கலைகள் வெகுவிரைவிலேயே பயிற்றுவிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே பயிற்சி யைத் தொடங்குவது உடல் சமநிலை, கேட்கும் திறன், அடிப்படை தற்காப்பு திறன், கை, கண்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
இசை: 4 முதல் 7 வயது, இசைக்கருவிகளை கையாள்வதற்கும், கற்றுக்கொள்ள தொடங்குவதற்கும் ஏற்றது. குழந்தைகளின் கைகளும், மனமும் இசையின் அடிப்படைகளை புரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்கும்.
நீச்சல்: 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நீச்சல் பயிற்சியை தொடங்கலாம் என்று அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ அகாடெமி பரிந்துரைத்துள்ளது. அந்த வயதுதான் நீச்சலுக்கு பொருத்தமான உடல் வளர்ச்சி கொண்டதாக கருதப்படுகிறது.
பரத நாட்டியம்: பெரும்பாலான குழந்தைகள் 5 முதல் 6 வயதில் பரத நாட்டியம் கற்கத் தொடங்குகிறார்கள். பரத நாட்டிய நடன வடிவத்தில் கடினமான உடல் அசைவுகள் இருப்பதால் அதற்கேற்ப உடல்வாகு அமையும் வரை காத்திருப்பது நல்லது என்பது பரதநாட்டிய கலைஞர்களின் கருத்தாக இருக்கிறது.