தற்போது கடும் வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. இதனால், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், தொழில்புரிவோர், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் உள்பட அனைத்து தரப்பினரும் வெயிலை சமாளிக்க முடியாமல் தவியாய், தவித்து வருகின்றனர். ஆகவே இந்த அனல் பறக்கும் வெயிலை சமாளிப்பது குறித்து டாக்டர்கள் கூறும் அறிவுரைகள் என்ன? என்றுபார்க்கலாம்:-
அனைவரும் வெப்பம் தொடர்பான வானிலை முன்னறிவிப்பு தகவல்களை அறிந்து கொள்வது அவசியம். அதற்கேற்ப பயணங்களை அமைத்துக்கொள்ளலாம். கோடைகாலத்தில் மிருதுவான வெள்ளாடை, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிவதால் வெப்பத்தின் தாக்கம் குறையும். கருப்பு, கனமான மற்றும் இறுக்கமான ஆடைகளை அணிவதையும் கடினமான வேலையையும் தவிர்த்தல் வேண்டும். வெயில் நேரங்களில் வெளியே செல்லும்போது கண்களை பாதுகாக்க கண்ணாடி, உடலைப் பாதுகாக்க குடை, தொப்பி, காலணி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். பயணத்தின்போது குடிநீரை எடுத்து செல்வது மிக நல்லது.
காலை, மாலை நேரத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கலாம். நீர்ச்சத்து குறையாமல் இருக்கும் வகையில், பழச்சாறு, மோர், இளநீர் மற்றும் தர்பூசணி, நுங்கு போன்றவைகளை பயன்படுத்தலாம். உடலில் சோர்வு, தளர்ச்சி, தலைவலி போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அதிகம் புரத சத்து உள்ள உணவுகள், காரமான உணவுகள் பதப்படுத்தப்படாத பழைய உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் வெளிக்காற்று வீட்டிற்குள் புகும் வகையில், வீட்டின் ஜன்னல் கதவுகளை திறந்து வைக்கலாம்.