கொழுப்பு கட்டி உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உடலில் வளரும் கட்டிகளில் புற்றுநோய் கட்டிகள், சாதாரண கட்டிகள் என 2 வகைகள் உண்டு. சாதாரணக் கட்டிகள் பொதுவாக எப்போதும் வலிப்பதில்லை. புற்றுநோய் கட்டிகள் ஆரம்பத்தில் வலி இல்லாமல் இருக்கும். பின்னர், திடீரென்று வலிக்க ஆரம்பிக்கும். அப்போது கட்டியின் நிறம் மாறுவது, அளவு கூடுவது, உடல் எடை குறைவது போன்ற துணை அறிகுறிகளையும் ஏற்படுத்துவது உண்டு. சாதாரண கட்டிகளில் கொழுப்பு கட்டி, நார் கட்டி, நீர் கட்டி, திசு கட்டி என பல விதம் உண்டு. கட்டி எந்த வகை என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

கொழுப்பு கட்டி பொதுவாக தோலுக்கும், தசைக்கும் இடையில் வளரும். மிக மிக மெதுவாகவே வளரும். மென்மையாகவும் உருண்டையாகவும் இருக்கும். கையால் தொட்டால் நகர கூடியதாகவும் இருக்கும். அதிகமாக அழுத்தினாலும் வலி இருக்காது. உடலில் எங்கு வேண்டுமானாலும் கொழுப்புக் கட்டிகள் தோன்றலாம். எனினும் கழுத்து, முதுகு, வயிறு, தொடைகள், கைகள், தோள்கள் ஆகிய இடங்களில் இவை ஏற்படுவதற்கு சாத்தியம் அதிகம். ஒருவருக்கு ஒரு கட்டி மட்டும் வளரலாம். சில சமயத்தில் பல கட்டிகளும் வளரலாம்.

கொழுப்பு கட்டி வளர்வதற்கான சரியான, தெளிவான காரணம் இன்றுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. என்றாலும் பரம்பரை தன்மை, அதிக கொழுப்பு உணவுகளை சாப்பிடுவது, உடல் பருமன், நீரிழிவு, மது அருந்துதல் போன்றவை இக்கட்டிகள் உருவாவதை தூண்டுகின்றன என்பது மட்டும் அறியப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் நடுத்தர வயதினரையும், ஆண்களையும் அதிக அளவில் பாதிக்கிறது. கொழுப்புக் கட்டிகள் சாதாரண கட்டிகளே. இவை புற்றுநோய் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. கட்டி வந்ததும் அதை குடும்ப மருத்துவரிடம் ஒரு முறை காண்பித்து, அது கொழுப்பு கட்டிதான் என்பதை உறுதி செய்துகொண்டு, அதை அப்படியே விட்டுவிடலாம். அகற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கு வேறு சிகிச்சைகளும் தேவையில்லை.

கட்டி உள்ள பகுதியில் வலி ஏற்படுகிறது, கட்டியின் வளர்ச்சி அதிகரிக்கிறது, துர்நாற்றம் வீசுகிறது, தோற்றத்தை கெடுக்கிறது என்றால் மட்டும் அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடலாம். இந்த கட்டியை ஒருமுறை அகற்றிவிட்டால், அந்த இடத்தில் மறுபடியும் அது வளராது. சிலருக்கு மறுபடியும் இந்த வகை கட்டி வேறு இடத்தில் வளரலாம். அது அவரவர் உடல் வாகை பொறுத்தது.

கட்டி திடீரென வேகமாக வளர்கிறது, அதன் வடிவம் மாறுகிறது, வலிக்கிறது, கட்டியின் மேல் பகுதி சருமத்தின் நிறம் மாறுகிறது, கட்டி உடலுக்குள் ஊடுருவிச் செல்கிறது என்பது போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அது புற்றுநோய் கட்டியா, இல்லையா என்பதை பரிசோதனை செய்து அதற்கேற்ப சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

Related Posts

Leave a Comment

Translate »